தென்காசி: குற்றால அருவிகளில் குளிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ள தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் முடிவை, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர்கள் அறக்கட்டளை வரவேற்றுள்ளனர்.
அதேவேளையில், இந்த நடவடிக்கை தற்காலிகமாக மட்டுமல்லாமல், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிரந்தரமாக கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தங்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பதாக இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “குற்றாலம் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாமல், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் இடமாகும். எனவே, மக்கள் நலனையும் வசதியையும் முன்னிலைப்படுத்தி, அருவிகளில் குளிப்பதற்கான கட்டணத்தை முழுமையாக நீக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வெளிநாடுகளில் பல ஆண்டுகள் பணியாற்றி தற்போது தாயகம் திரும்பியுள்ள தமிழர்களுக்கு, ஐந்தருவி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அருவி பகுதிகளில் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் உள்ளூர் தமிழர்களுக்கு நிலையான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், அவர்களின் குடும்பங்களின் பொருளாதார நிலை மேம்படும் என அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து, பொதுமக்கள் மற்றும் தமிழர் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர்கள் அறக்கட்டளை சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் திவான் நயீம் வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
M Siraj